[16:35]

அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம் என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).

[16:36]

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், "அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள்.

[16:37]

(நபியே!) அவர்கள் நேர்வழி பெற்றிடவேண்டுமென்று நீர் பேராவல் கொண்ட போதிலும், அல்லாஹ் யாரை வழிதவற வைத்தானோ அத்தகையோரை நேர்வழியில் சேர்க்க மாட்டான் - இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோரும் எவருமில்லை.

[16:38]

இறந்தவர்களை அல்லாஹ் (உயிர்ப்பித்து) எழுப்ப மாட்டான் என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது பிரமாணமாகச் சத்தியம் செய்கிறார்கள். அப்படியல்ல! (உயிர் கொடுத்து எழுப்புவதான அல்லாஹ்வின்) வாக்கு மிக்க உறுதியானதாகும்; எனினும் மக்களில் பெரும்பாலோர் இதை அறிந்து கொள்வதில்லை.

[16:39]

(இவ்வுலகில்) அவர்கள் எவ்விஷயத்தில் பிணங்கி(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அதை அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகவும், காஃபிர்கள் தாம் பொய்யர்களாக இருந்தார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் (அல்லாஹ் அவர்களை மறுமையில் உயிர்ப்பிப்பான்).

[16:40]

ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.

[16:41]

கொடுமைப்படுத்தப்பட்ட பின்னர், எவர்கள் அல்லாஹ்வுக்காக நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்களோ, அவர்களுக்கு, நாம் நிச்சயமாக அழகான தங்குமிடத்தை இவ்வுலகத்தில் கொடுப்போம். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டார்களேயானால் மறுமையிலுள்ள (நற்) கூலி (இதைவிட) மிகவும் பெரிது

[16:42]

இவர்கள் தாம் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொண்டு, தம் இறைவன் மீது முற்றிலும் சார்ந்து முழு நம்பிக்கை வைப்பவர்கள்.